திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட எண்ணூர் தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், சின்னகுப்பம், உலகநாதபுரம், சத்தியவாணி முத்து நகர் போன்ற பகுதிகளில் நேற்றுமுன்தினம் மாலை 6 மணிக்கு மின் தடை ஏற்பட்டது. ஆனால், இரவு 9.30 மணி வரை மின் விநியோகம் செய்யப்படாததால், மேற்கண்ட பகுதி மக்கள் தூக்கமின்றி தவித்தனர். மாணவ மாணவிகள் படிக்க முடியாமல் சிரமப்பட்டனர். இரவு 10 மணி ஆகியும் மின்சாரம் வராததால், இதுபற்றி மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு பொதுமக்கள் கேட்டபோது, முறையான பதிலளிக்கவில்லை, என்று கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 500க்கும் மேற்பட்டோர் ராமநாதபுரம் அருகே கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் திரண்டு, அடிக்கடி ஏற்படும் மின்தடைக்கு நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.