சேதுபாவாசத்திரம்: சேதுபாவாசத்திரம் அருகே பணிகள் முடிந்து ஓராண்டாகியும் பயன்பாட்டுக்கு வராத மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென சிஐடியூ மீனவர் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சை மாவட்ட கலெக்டர் மற்றும் ஒன்றிய ஆணையருக்கு சிஐடியூ மீனவர் பிரிவு சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர் நாகேந்திரன் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: சேதுபாவாசத்திரம் அருகிலுள்ள மரக்காவலசை ஊராட்சி கடற்கரை பகுதியான கழுமங்குடாவில் கடும் குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. இதனை போக்கும் வகையில் பல்வேறு முறை கோரிக்கை வைத்ததன்பேரில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தேக்க தொட்டி அமைப்பதற்கு சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்து தொட்டி அமைக்கப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிறது.