சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கும் டாக்டர்களுக்கு ஆதரவாக முதுநிலை மருத்துவ மாணவர்கள் நேற்று மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.அரசாணை 354ன்படி 2017ம் ஆண்டு வழங்க வேண்டிய கூடுதல் ஊதியம் டாக்டர்களுக்கு உயர்த்தி வழங்கப்படவில்லை. மேலும், முதுநிலை மருத்துவ மாணவர்கள் படித்ததும் அந்தந்த கல்லூரிகள் அருகிலேயே பணி வழங்க வேண்டும். ஆனால், அவ்வாறு இருந்த நடைமுறையை மாற்றி வெவ்வேறு ஊர்களில் பணி வழங்கியுள்ளனர். அதில் பழைய நடைமுறையே தொடர வேண்டும். நீட் தேர்வு மூலம் அரசு மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவர்களின் 50 சதவீத இட ஒதுக்கீடு பறிக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீட்டை திரும்ப அளிக்க வேண்டும் என்ற 4 கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் கடந்த 2 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.