நேரடி நெல் விதைப்பு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ₹600 உழவு மானியம்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

சென்னை: நேரடி நெல் விதைப்பு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.600 உழவு மானியம் வழங்கப்படும் என்றும், இதற்காக தமிழக அரசு ₹300 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு முழுவதும் சுமார் 43.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இதில், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் காவிரி நீரினை ஆதாரமாக கொண்ட டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் நடப்பு பருவத்தில் 13 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து கடந்த 13ம் தேதியும், கல்லணையில் இருந்து கடந்த 17ம் தேதியும் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்தி, நேரடி நெல் விதைப்பு செய்து சாகுபடி மேற்கொள்ள வேண்டும்.

நேரடி நெல் விதைப்பு முறை மூலம் சாகுபடி மேற்கொள்ளும்போது சுமார் 40 முதல் 45 டி.எம்.சி. தண்ணீர் சேமிக்கப்படுவதோடு, நெற்பயிரும் 10 முதல் 15 நாட்கள் முன்னதாகவே அறுவடைக்கு தயாராகிவிடும். இதனை முன்னெடுத்து செல்வதற்காக சிஆர் 1009, சிஆர் 1009 சப் 1, கோ 50, ஏடிடி 50, டிகேஎம் 13 போன்ற நெல் ரகங்களின் விதைகள் போதுமான அளவில் இருப்பில் வைக்க வேளாண்மை துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். நடப்பு பருவத்தில் நேரடி நெல் விதைப்பு சாகுபடியை ஊக்குவிக்க, ஏக்கருக்கு ரூ.600 வீதம் உழவு மானியம் வழங்க  உத்தரவிட்டுள்ளேன். அதன்படி, 5 லட்சம் ஏக்கர் பரப்பில் நேரடி நெல் விதைப்பு சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில், மானியம் வழங்குவதற்காக, தமிழக அரசு ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. டெல்டா மாவட்டங்கள் மற்றும் உள்ளூர் பாசன வசதி துணையோடு நேரடி நெல் விதைப்பு முறை மூலம் சாகுபடி செய்யும் இதர மாவட்ட விவசாயிகளும் மேற்கண்ட உழவு மானியத்தை பெற்று, நீரை சேமித்து, அதிக விளைச்சல் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: