×

தனி துணை தாசில்தார் போலீசில் புகார் மண்டபம் அகதிகள் முகாமில் தம்பதி, 4 குழந்தைகளுடன் மாயம்: பல லட்சம் மோசடி செய்து வெளிநாடு ஓட்டமா?

மண்டபம்: மண்டபம் முகாமில் போலீஸ் பாதுகாப்பில் தங்கியிருந்த தம்பதி, 4 குழந்தைகளுடன் மாயமானது குறித்து தனி துணை தாசில்தார் போலீசில் புகார் அளித்துள்ளார்.  ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில், 350க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 1,700க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அகதிகளை சந்திக்க விரும்பும் உறவினர்கள் தனித்துணை ஆட்சியரிடம் முறையான அனுமதி பெற வேண்டும். வெளியூர் செல்ல விரும்பும் அகதிகள் போலீசார், தனித்துணை ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று செல்ல வேண்டும். இந்நிலையில், இலங்கை, யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த உதயகலா, தயாபரராஜ் தம்பதியினர் 3 பெண் குழந்தைகளுடன் விமானம் மூலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழகம் வந்தனர். இவர்களுக்கு விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, மண்டபம் அகதிகள் முகாமில் தங்கிய இவர்களது குடும்பத்திற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

உடல்நலம் பாதித்த கணவரை சிகிச்சைக்காக, மதுரை, ராமநாதபுரம் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு உதயகலா அழைத்துச் சென்றார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. 4 குழந்தைகளுடன் வசித்த இவர்கள், மே 20ம் தேதி முகாமை விட்டு வெளியேறி, ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் வசித்தனர். தம்பதி முகாமிற்கு மீண்டும் திரும்பாததால், ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் சென்று பார்த்தபோது குடும்பத்துடன் மாயமானது தெரிந்தது. இதுகுறித்து தனித்துணை தாசில்தார் (குடியிருப்புகள் பிரிவு) ரவி போலீசில் புகார் செய்தார். அதன்படி மண்டபம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். உதயகலா, பலரிடம் லட்சக்கணக்கான ரூபாய் கடன் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. தன் மீது பண மோசடி புகார் கொடுக்கப்போவதை அறிந்த உதயகலா 4 குழந்தைகள் மற்றும் கணவருடன் மாயமானதாக கூறப்படுகிறது. போலி பாஸ்போர்ட்டில் ஆஸ்திரேலியா அல்லது நியூசிலாந்து சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.



Tags : Separate companion Dasildar, couple, 4 children, fraud
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...