ஆவடி: ஆவடி அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 2016 முதல் 2018 வரை படித்த முன்னாள் மாணவர்களுக்கு இதுவரை லேப்டாப் வழங்கவில்லை. அவர்கள் பலமுறை பள்ளிக்கு வந்து ஆசிரியர்களை சந்தித்து லேப்டாப் கேட்டுள்ளனர். இருந்தபோதிலும் அவர்களுக்கு லேப்டாப் வழங்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, கடந்த மாதம் 23ம் தேதி 100க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் போலீசாரும், ஆசிரியர்களும் சேர்ந்து, முன்னாள் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர்கள் உயர் அதிகாரியிடம் பேசி 2 வாரத்திற்குள் லேப்டாப் வழங்கிட உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர், அதிகாரிகள் அளித்த காலக்கெடு முடிந்தும் லேப்டாப் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டும் சரியான பதில் இல்லை.