பெரம்பூர் ஊராட்சி குளத்தில் பிளாஸ்டிக் கழிவை கொட்டுவதால் சுற்றுப்புற சூழல் பாதிக்கும் அபாயம்

கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே பெரம்பூர் கிராமம் பொதுகுளத்தில் கொட்டப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுசூழல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பெரம்பூர் கிராமத்தில் ஊராட்சிக்குச் சொந்தமான பொதுக்குளம் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் முன்பு வாய்க்காலின் வழியே தண்ணீர் வந்து தேங்கியும், பின்னர் உடனுக்குடன் வடிய வைக்கும் வகையில் வடிகால் வாய்க்காலும் அமைக்கப்பட்டிருந்தது. 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்த இந்த பொதுக்குளம் தூர்வாரப்படாமல் விடப்பட்டது. இதனால் குளம் தூர்ந்து போய் கட்டாந்தரையாக காட்சியளிக்கிறது. இந்த குளத்திற்கு உள்ள உரிய வாய்க்கால்கள் தூர்ந்து போயுள்ளதால் தண்ணீர் இக்குளத்திற்கு வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில் இக்கிராமத்தில் உள்ளவர்கள் குளிப்பதற்கும், கால்நடைகளுக்கும் இந்த குளத்து நீரைப் பயன்படுத்தி வந்தனர்.

ஆனால் காலப்போக்கில் இந்த குளமானது தூர்ந்து போய் குப்பை மேடாகி வருகிறது. அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்கள், அழுகிய காய்கறிகள், இறந்த உயிரினங்கள் உள்ளிட்ட பொருட்கள் இக்குளத்தில் கொட்டப்படுகின்றன. காற்று வீசும் போதெல்லாம், இங்குள்ள குப்பைகள் காற்றில் பறந்து வந்து அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை சுற்று குவிந்து விடுகிறது. இதனால் சுற்றுபுறச் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி பெரம்பூர் குளத்தை தூர்வாரவும் குப்பைகளை சேகரிக்க ஊராட்சி சார்பில் குப்பைத் தொட்டி வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: