சென்னை: நலிந்த கலைஞர்களுக்கு மாத உதவித் தொகை ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற கலைமாமணி விருதுகள் வழங்கும் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: இசை, கிராமியம், நாட்டியக் கலை என பல கலைகளின் பிறப்பிடமாக தமிழ்நாடு திகழ்கின்றது. கலைஞர்கள் எப்போதும் தங்கள் வாழ்வில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட வேண்டும் என்ற நோக்கத்தில் ஜெயலலிதா பல்வேறு நலத் திட்டங்களையும், விருதுகளையும் அறிவித்து, அவர்களை ஊக்கப்படுத்தி வந்தார். நலிந்த நிலையில் வாழும் 500 கலைஞர்களுக்கு மாதந்தோறும் 2 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. 14,063 கலைஞர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் மாதாந்திர நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இளம் கலைஞர்களுக்கு ஆதரவும் ஊக்கமும் அளிக்கும் திட்டத்தில் இதுவரையில் 1,972 இளம் கலைஞர்கள் பயனடைந்துள்ளனர்.