சென்னை: அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்ததால் எனக்கு தொடர்ந்து மிரட்டல் வருகிறது. உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதனால் காவல்துறை எனக்கும், கணவர் மாதவனுக்கும் முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனிடம் ஜெ.தீபா ஆடியோ மூலம் புகார் அளித்துள்ளார்.ஆடியோ புகாரில் ஜெ.தீபா கூறியிருப்பதாவது:நான் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயக்குமார் பேசுகிறேன். இந்த ஆடியோ மூலம் உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்க விரும்புகிறேன். அதிகாரப்பூர்வமாக நானே எனது சொந்த முடிவின்படி இதை ஒரு புகாராக தெரிவிக்க விரும்புகிறேன்.நான் தொடங்கிய பேரவை 2 ஆண்டு காலமாக நடந்து வந்த ஒரு அரசியல் அமைப்பு. அதை தாய் கழகமான அதிமுகவுடன் இணைக்கும் தருவாயில் எனக்கு சில தொந்தரவுகள் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக அந்த பேரவையில் செயல்பட்டு வந்த சிலர் தேவையற்ற வகையில் எனக்கு தொந்தரவு அளித்துக் கொண்டு இரவு, பகலாக போன் செய்வதுடன், வாய்ஸ் மெசேஜ் அனுப்புகிறார்கள். ஒரு பெண் என்றும் பாராமல் 24 மணி நேரமும் எனக்கு தொல்லை கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆகவே, தார்மீக அடிப்படையில் ஒரு தனிநபராக அரசியலில் இருந்து விலகிவிட்ட சூழ்நிலையில் எனது உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தயவுசெய்து காவல்துறை விரைந்து கவனம் செலுத்தி எனக்கும், எனது கணவர் மாதவனுக்கும் முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும். என்னுடைய உயிர், உடமைகள் மற்றும் அனைத்துவிதத்திலும் பாதிப்படைய வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக 6 பேர் சேர்ந்து, தொடர்ச்சியாக என்னை துன்புறுத்தி டார்ச்சர் செய்து வருகிறார்கள். எங்களுக்கு எந்த நேரமும் அச்சுறுத்தல் இருக்கிறது. எனக்கும், எனது கணவருக்கும், எனது இல்லத்துக்கும் பாதுகாப்பு அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்துகிறேன். என்னுடைய உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நான் தொடர்ச்சியாக சிகிச்சையில் இருக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறேன். இந்த நேரத்தில் அரசியலில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுள்ளது. அதிமுக என்ற மக்கள் சக்தியுடைய அமைப்பில் இந்த பேரவை இணைக்கப்பட்டது. அதனால் அதிருப்தியில் இருப்பவர்கள், சிலரது தூண்டுதலின்பேரின் தன்னிச்சையாக செயல்பட்டு என்னை மிரட்டி தொந்தரவு செய்வதால், எல்லா விதத்திலும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளேன். காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.