பாடாலூர்: பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் நேற்று மாலை 2 மணி நேரம் கனமழை கொட்டியது. இதனால் மருதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. நேற்று பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை கொட்டியது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகாவை சேர்ந்த மேலமாத்தூர், கீழமாத்தூர், ராமலிங்கபுரம், அருணகிரிமங்கலம், ரகலாபுரம், கல்லுப்பட்டி மற்றும் அரியலூர் நகரம், அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நேற்று பிற்பகல் பலத்த மழை கொட்டியது. 2 மணி நேரம் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால் வறண்டு கிடந்த இந்த பகுதி வெள்ளக்காடானது. மழைநீர் முழுவதும் காட்டாறுகள் வழியாக மருதையாற்றில் பாய்ந்தது.