சென்னை: இன்ஜினியரிங் ஆன்லைன் கலந்தாய்வில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் இன்ஜினியரிங் கலந்தாய்வு இணையதளம் மூலம் நடந்து வருகிறது. இந்நிலையில் தனியார் கல்லூரி ஒன்றின் பெயரில் ஒரு மாணவரை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், மாணவரின் இன்ஜினியரிங் கவுன்சலிங் யூசர் ஐடி, பாஸ்வேர்டு பெற்று குறிப்பிட்ட கல்லூரி நிர்வாகத்தின்கீழ் செயல்படும் 2 கல்லூரிகளில் மட்டும் சேரும் வகையில் சீட் தேர்வு செய்து லாக் செய்துவிட்டதாக மாணவர், அவரின் தந்தை தொழில்நுட்ப கல்வி இயக்ககத்திடம் புகார் தெரிவித்தனர். தங்கள் கல்லூரியின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்கான முயற்சி இது என குறிப்பிட்ட கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து அந்த மாணவருக்கு மீண்டும் விருப்ப கல்லூரி பட்டியல் பதிவேற்றம் செய்ய தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அனுமதி அளித்தது. இந்நிலையில் இன்ஜினியரிங் ஆன்லைன் கலந்தாய்வில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று தொழில்நுட்க கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: இன்ஜினியரிங் கலந்தாய்வில் முறைகேடு என வெளியான தகவல்கள் உண்மை அல்ல. இணையதள பொறியியல் கலந்தாய்வு 100 சதவீதம் வெளிப்படைத் தன்மையுடன் நடந்து வருகிறது.