சென்னை: சென்னையில் மொத்தம் 210 நீர்நிலைகள் உள்ளன. சென்னை மாநகராட்சி சார்பில் முதல்கட்டமாக 104 நீர்நிலைகள் பல்வேறு திட்டங்களின் கீழ் சீரமைக்கப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு கோயில் குளங்களும் சீரமைக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, 114 நீர் நிலைகளை சீரமைக்க ரூ.100 கோடியை தமிழக அரசு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு ஜல்சக்தி திட்டத்தின் கீழ் 710 தாலுகாக்களில் உள்ள நீர் நிலைகளை சீரமைக்க முடிவு செய்து தொடர் ஆய்வு நடத்தி வருகின்றனர். அதன்படி, சென்னையில் சீரமைக்கப்பட்ட நீர் நிலைகளை நேற்று மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் குழு பார்வையிட்டது. ராயபுரம் கந்தகேட்ட முத்துகுமாரசாமி கோயில் குளம், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளம், பார்த்சாரதி கோயில் குளம், திருவட்டீஸ்வரர் கோயில் குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்கள் மற்றும் நீர்நிலைகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.