கடையநல்லூர்: கடையநல்லூரை அடுத்த சொக்கம்பட்டி கருப்பாநதி அணைப்பகுதியில் தண்ணீர் தேடி வந்த காட்டு யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து தென்னை, வாழை, மாமரங்களை சேதப்படுத்தியது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம், கடையநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதி விளைநிலங்களில் காட்டு யானைகள் அடிக்கடி கூட்டம் கூட்டமாக நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. கடந்த வாரம் மேக்கரை, வடகரை பகுதிகளில் காட்டு யானைகள் புகுந்து தென்னைகள், வாழைகளை சேதப்படுத்தியது. கடந்த 2ம் தேதி கடையநல்லூர் வனச்சரகத்திற்குட்பட்ட இரண்டு ஆற்று முக்கு பகுதியில் காட்டு யானைகள் கூட்டமாக நுழைந்து நான்கு விவசாயிகளுக்கு சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட வாழைகள், 10க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தியது. கடந்த 6ம் தேதி மீண்டும் இரண்டு ஆற்று முக்கு வைரவன்குளம், கருஞ்சனாப்பேரி பகுதி தென்னந்தோப்பில் கூட்டமாக நுழைந்த யானைகள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை மரங்களின் குருத்துக்களை பிடுங்கியும், மட்டைகளை உடைத்தும் சேதப்படுத்தியுருந்தது.