தாம்பரம் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளை: ஆசாமிகளுக்கு வலை

தாம்பரம்: தாம்பரம் அடுத்த இரும்புலியூர், சதானந்த பாரதியார் தெருவை சேர்ந்தவர் வீரேந்தர் ஜெயின் (38). இவர் அதே பகுதியில் அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஹைதராபாத் சென்றிருந்தார். நேற்று காலை வழக்கம் போல் கடைக்கு சென்ற வீரேந்தர் ஜெயின், மதியம் வீட்டிற்கு சென்றபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 50 சவரன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து வீரேந்தர் ஜெயின் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் மற்றும்  மோப்ப நாயுடன் சென்று சோதனை செய்தனர்.  பின்னர், அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடிவருகின்றனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: