தூத்துக்குடி: தூத்துக்குடியில் தண்ணீர் பஞ்சத்தால் ஒரு கிராமமே ஊரை காலி செய்துவிட்டு வெளியேறியுள்ளது. மேலும் ஒரேயொரு முதியவர் மட்டும் வசிக்கும் நிலையில் தற்போது அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி பஞ்சாயத்திற்குட்பட்ட மீனாட்சிபுரம் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தன. இதையடுத்து 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கடும் வறட்சி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் ஒவ்வொரு குடும்பமாக வெளியேறி செக்கரக்குடி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் கேரளாவிற்கு இடம் பெயர்ந்துள்ளனர். இதை தொடர்ந்து படிப்படியாக பெரும்பான்மையினர் ஊரை காலி செய்த நிலையில் கந்தசாமி என்ற முதியவர் மட்டும் தனியாக வசித்து வருகிறார். மேலும் 80 வயதான இவர் தனது மனைவி இறந்த நிலையில் அவரின் நினைவில் அங்கேயே தங்கி விட்டார்.