தென்காசி: குற்றாலத்தில் கடந்த மூன்று தினங்களாக சாரல் மழை பெய்து வருவதால் அருவிகளில் தண்ணீர் வரத்து சிறிது அதிகரித்துள்ளது. விடுமுறை தினமான இன்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. இந்த ஆண்டு சீசன் வழக்கத்தை விட 10 நாட்கள் தாமதமாக தொடங்கிய நிலையில் அரபிக் கடலில் உருவான புயலால் 3 நாட்கள் நீடித்து பின்னர் ‘சுள்’ளென்று வெயில் அடித்தது. இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்து சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அடியோடு குறைந்து காணப்பட்ட நிலையில் கடந்த மூன்று தினங்களாக வெயில், மழை என இதமான சூழல் நிலவுகிறது. அவ்வப்போது லேசான சாரல் காணப்படுகிறது. மிதமான தென்றல் காற்று வீசுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் அவ்வப்போது மேகமூட்டம் தவழ்ந்து செல்கிறது.