ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை கடலுக்கு சென்ற மீனவர்கள், இன்று காலை கரை திரும்பினர். குறைந்த அளவு இறால் மீன்களே கிடைத்ததாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 800க்கும் அதிகமான விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். கச்சத்தீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் நேற்று முழுவதும் மீ ன்பிடித்து விட்டு இன்று காலை அவர்கள் கரை திரும்பினர். சிறிய படகுகளுக்கு அதிக பட்சமாக 70 கிலோவும், பெரிய படகுகளுக்கு 150 கிலோ வரையிலும் இறால் மீன்பாடு இருந்தது. இறால் மீன்கள் குறைவாக கிடைத்துள்ளதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற முதல் நாள் 800 கிலோ வரை இறால் மீன்பாடு இருந்ததால், கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.