ஆனித்திருமஞ்சன திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள்: கடலூர் எஸ்பி ஆலோசனை

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன  திருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.  ஜூலை 7 மற்றும் 8ம் தேதிகளில் முக்கிய  விழாக்களான தேர்த்திருவிழா, ஆனித்திருமஞ்சன தரிசன விழா ஆகியவை நடக்கிறது.  இதனையொட்டி நடராஜர் கோயிலுக்கு நேற்று மதியம் கடலூர் மாவட்ட எஸ்பி சரவணன்  வருகை தந்தார். கோயிலில் மக்கள் கூடும் இடங்களான நடனபந்தல், ஆயிரங்கால்  மண்டபம் ஆகிய இடங்களை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ்  அதிகாரிகள் மற்றும் தீட்சிதர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

திருவிழாவின் போது  கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக  செய்யவும், எவ்வித குறைபாடுகளும் இன்றி அனைவரும் சிறப்பாக பணியாற்ற  போலீசாருக்கு அறிவுறுத்தினார். கோயிலின் பிரதான வாயில் உள்ள கீழசன்னதியில்  இருபுறங்களிலும் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு  உத்தரவிட்டார். அப்போது சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர்கள்  சிதம்பரம் முருகேசன், புவனகிரி ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர்கள்  சுரேஷ்முருகன், தனசேகரன், தியாகராஜன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories: