2வது நாளாக இன்று நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தினகரன் நாளிதழ் சார்பில் மாபெரும் மருத்துவ கண்காட்சி

சென்னை: தினகரன் நாளிதழ் மற்றும் மியாட் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் மருத்துவ கண்காட்சி இன்று 2 வது நாளாக நடைபெறுகிறது. இன்று விடுமுறை என்பதால் குடும்பம் குடும்பமாக ஆயிரக்கணக்கான மக்கள் வருகை  தந்து கண்காட்சியை பார்வையிட்டனர்.சென்னை தினகரன் நாளிதழ் ஒவ்வொரு ஆண்டும் ஹெல்த் அண்டு பிட்னஸ் தொடர்பாக மாபெரும் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் தினகரன் நாளிதழ் மற்றும் மியாட்  சர்வதேச மருத்துவமனை, ஜெம் மருத்துவமனை, நியூட்ரா பாக்ஸ், எத்னிக் ஹெல்கேர் ஆகிய நிறுவனங்கள் இணைந்து “ஹெல்த் அண்டு பிட்னஸ் - 2019” என்ற மாபெரும் மருத்துவ கண்காட்சி நேற்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக  மையத்தில் தொடங்கியது. இந்த கண்காட்சி இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது.

இந்த மாபெரும் மருத்துவ கண்காட்சியை தினகரன் நாளிதழின் நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.ஆர். ரமேஷ் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களான ஜெம் மருத்துவமனையின் இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி  டாக்டர் எம்.எஸ். அசோகன், நியூட்ரா பாக்ஸ் தலைமை செயல் அதிகாரி நிகர் தேசாய், எத்திக் ஹெல்கேர் நிறுவனத்தை சேர்ந்த டாக்டர் யோக வித்யா, மிஸ்டர் வேல்டு எம். அரசு ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இந்த  நிகழ்ச்சிக்கு தினகரன் நாளிதழின் மார்கெட்டிங் தலைமை பொது மேலாளர் ராஜேஷ் கண்ணன் தலைமை தாங்கினார்.இந்த கண்காட்சியில் அதிநவீன பல்நோக்கு மருத்துவமனைகளின் அரங்குகள், சித்தா, யுனானி, அக்குபஞ்சர்  மருத்துவமனைகளின் அரங்குகள், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு பொருட்கள், அழகு சாதனங்கள், உடற்பயிற்சி நிலையங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், ஊட்டச்சத்து உணவு தயாரிப்பு நிறுவனங்கள்,வாசனை திரவியங்கள், மருத்துவ உணவுப்  பொருட்கள், மருந்துகள் என நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மருத்துவ கண்காட்சியில், உடல் சார்ந்த நீரழிவு நோய் மற்றும் உடல் பருமன், உடல் பருமனால் ஏற்படும் கை, கால், மூட்டுவலி மற்றும் முதுகுவலி பிரச்னைகள், உடலில் ஏற்படக்கூடிய பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு  காண்பதற்கான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதற்காக பல்வேறு முன்னணி மருத்துவமனைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு பரிசோதனைகளும் நடத்தப்பட்டது.ஐவிஎப் சிகிச்சை முறையில் மிக  குறைந்த செலவில் மகப்பேறு சிகிச்சை வழங்குவது மற்றும் அவை தொடர்பான மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. இது போன்ற முக்கியமான மருத்துவ சிகிச்சைகளுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கவும் கண்காட்சியில்  பிரபல மருத்துவமனைகள் காத்திருக்கின்றன. மேலும் ஊட்டச்சத்து உணவு வகைகள், உடற்பயிற்சி உபகரணங்கள், அழகு சாதனப் பொருட்கள் இடம் பெறுகின்றன. இந்த மருத்துவ கண்காட்சியில் பங்கு பெற்று மருத்துவ சிகிச்சைகள் குறித்து  அனைத்து விதமான ஆலோசனைகளை பெறலாம்.

இந்நிலையில் நேற்று காலை 10.30 மணிக்கு கண்காட்சி தொடங்கியவுடன் மருத்துவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொது மக்கள் கூட்டம் கூட்டமாக கண்காட்சியை பார்வையிட்டு வருகின்றனர். மேலும் மருத்துவ கண்காட்சியில் உள்ள  பல்வேறு அரங்குகளுக்கு சென்று உடல் மற்றும் பிட்னஸ் தொடர்பான சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெற்றனர். இதைத் தவிர்த்து உடல் மற்றும் பிட்னஸ் தொடர்பான பிரச்சனைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் தொடர்பாகவும்  கேட்டு அறிந்து கொண்டனர். நேற்று காலை தொடங்கிய கண்காட்சி இன்றும் நடைபெறுகிறது. பொதுமக்கள் இலவசமாக கண்காட்சியில் உள்ள பல்வேறு அரங்குகளை பார்வையிட்டு பல்துறை சார்ந்த மருத்துவர்களிடம் விளக்கங்களை கேட்டு தெரிந்து கொண்டனர். நேற்று நடைபெற்ற மருத்துவக் கண்காட்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு உடல் பரிசோனை செய்து கொண்டனர். மேலும் மருத்துவம் சம்பந்தமான தங்களுடைய சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.

மேலும் கண்காட்சியில் ஆணழகன் போட்டி மற்றும் கட்டுதல் போட்டிகள் நடைபெற்றது. இதில் 300 க்கும்  மேற்ப்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் கலந்து கொண்டு ஆணழகன் போட்டியில் முதல் 15 பேரும், கட்டுடல்  போட்டியில் முதல் 5 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான இறுதிப் போட்டி இன்று மாலை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். ேமலும் இரண்டாவது நாளாக  நடைபெறும் இந்த மாபெரும் மருத்துவ கண்காட்சியில் இன்று விடுமுறை என்பதால் மக்கள் குடும்பம் குடும்பாக வருகை தந்து தங்களுடைய உடல் பரிசோதனை செய்து கொண்டனர். மேலும் மருத்துவம் சம்பந்தமான சந்தேகங்களை  மருத்துவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.

Related Stories: