நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் சாரல் மழை பெய்ய தொடங்கியுள்ளது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை காணப்படுகிறது. நேற்று முன்தினம் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் இரவு பரவலாக சாரல் மழை பதிவாகியது. குளச்சலில் 12 மி.மீ, சிற்றார்-1ல் 3.4, பேச்சிப்பாறை 4.6, பெருஞ்சாணி 3.8, புத்தன் அணை 3, சிற்றார்-2ல் 3.2 மி.மீட்டரும் மழை பதிவாகி இருந்தது. நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறையில் அணை நீர்மட்டம் 12.15 அடியாக இருந்தது. பெருஞ்சாணியில் 37.65, சிற்றார்-1ல் 7.54, சிற்றார்-2ல் 7.64, பொய்கையில் 8.20, மாம்பழத்துறையாறு அணையில் 45.12 அடியும் நீர்மட்டம் காணப்படுகிறது. மாவட்டத்தில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து மதியம் முதல் சாரல் மழை விட்டுவிட்டு பெய்த வண்ணம் இருந்தது.