புழல்: சோழவரம் ஒன்றியம் திருநிலை ஊராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் அரசு அனுமதி இல்லாமல் மணல் மற்றும் மண் எடுக்கப்பட்டதால் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டு தற்போது ஏரி முழுவதுமாக வறண்டுள்ளது. மேலும் கரை இல்லாத பகுதிகளான பெருங்காவூர், மேட்டு காலனி பகுதிகளில் சுமார் 10 ஏக்கர் அளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏரி மழைக்காலங்களில் நிரம்பியபோது திருநிலை, திருநிலைகாலனி, கோயில்மேடு, கவுண்டர்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 150 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாய நிலங்களுக்கு ஏரியின் மூலம் விவசாயம் செய்து வந்தனர்.இந்நிலையில் கடும் வெயில் காரணமாக தற்போது இந்த ஏரி முற்றிலும் வறண்டு உள்ளது. மேலும், மழைநீர் ஏரிக்கு வரக்கூடிய கால்வாய்களை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் வரத்து குறைந்தது.