சென்னை: டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 1 தேர்வை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்தது.கடந்த மார்ச் மாதம் நடந்த குரூப் 1 முதல்நிலை தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளுக்கு சரியான விடைகளை தெரிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்பட்ட மாதிரி விடைத்தாளில் 18 விடைகள் தவறானவை என புகார் எழுந்தது.இதையடுத்து, குரூப் 1 தேர்வை ரத்து செய்யக்கோரி விக்னேஷ் என்ற விண்ணப்பதாரர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன்னிலையில் விசாரணையில் உள்ளது. முன்னதாக, தேர்வில் கேட்கப்பட்ட 24 கேள்விகள் தவறானவை என டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கான மதிப்பெண்களை தேர்வு எழுதியவர்களுக்கு வழங்கப்பட்டு விட்டதாகவும் டிஎன்பிஎஸ்சி தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.