சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மயங்கி விழுந்து பெண் பலி

சென்னை: உறவினர் திருமணத்திற்கு செல்வதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த ஒரு பெண் திடீரென மயங்கி விழுந்து இறந்தது பயணிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியது.திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, எஸ்.எல்.ஆர் கேம்ப், பாடி குப்பம் பகுதியை சேர்ந்தவர் சரோஜா (59). இவர், நேற்று முன்தினம் தன்னுடைய உறவினர் திருமணத்திற்கு மேட்டுப்பாளையம் செல்ல இரவு 8.30 மணிக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற குடும்பத்துடன் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்துள்ளார். பின்னர் ரயிலுக்காக காத்திருந்தபோது திடீரென சரோஜா மயங்கி விழுந்துள்ளார்.

உடனே உறவினர்கள் அவரை மீட்டு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சரோஜா இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதை கேட்டு உறவினர்களும், சக பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.  தகவலறிந்து ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சரோஜாவின் சடலத்தை மீட்டு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரோஜா சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: