சென்னை: தண்ணீர் பிரச்னையை தீர்க்காத அதிமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் 22ம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக தலைமை கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: குடிநீர் பிரச்னையைத் தீர்க்க எடுத்த நடவடிக்கை என்ன, நீர் வற்றி வருகிறது என்று கடந்த ஆண்டே தெரிந்திருந்தும் அது குறித்து அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிமுக அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியும், முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு அடாவடியான பேட்டிகளில் ஈடுபட்டுள்ளதே தவிர, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க முன் வரவில்லை. தண்ணீருக்காக காலிக்குடங்களுடன் அலையும் தாய்மார்களையும், ஆங்காங்கே அமைதி வழியில் மறியலில் ஈடுபடும் பொதுமக்களையும் கொச்சைப்படுத்திடும் வகையில் அமைச்சர்களும், முதலமைச்சரும் பேட்டியளித்து வருகிறார்கள். குடிநீர் தட்டுப்பாடு என்பது வதந்தி என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆணவத்துடன் பேட்டி கொடுக்கிறார். எங்கோ ஓரிடத்தில் உள்ள குடிநீர் பிரச்சினையை பெரிதாக்கி ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்க வேண்டாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊடகங்களுக்கும் பத்திரிக்கைகளுக்குமே நேரடியாக எச்சரிக்கை விடுக்கிறார். தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னையை தீர்க்க முடியாமல் தோல்வியடைந்து நிற்பதோடு மட்டுமின்றி, துறை அமைச்சரும், முதலமைச்சரும் அளிக்கும் பேட்டிகள் குப்புறத்தள்ளிய குதிரை குழியும் பறித்து விட்ட கதையாக இருக்கிறது.