சென்னை: நீலகிரி மாவட்டம், முலிகூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி, சென்னை தி.நகரில் உள்ள பிரபல பீட்சா கடையில் மீடியம் வெஜ் பீட்சா ஆர்டர் செய்துள்ளார். இரவு 10.45 மணிக்கு டெலிவரி செய்து, ₹662 பணம் வாங்கியுள்ளனர். இதனைதொடர்ந்து சங்கர் பீட்சாவை சாப்பிட தொடங்கியுள்ளார். அதனை கடித்து சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது, கடினமான பொருளை கடித்தார். என்னவென்று பார்த்தபோது, பீட்சாவில் இரும்பு கம்பி இருந்துள்ளது. இதனால், அவர் கடும் அதிர்ச்சியடைந்தார். மேலும், அதனால் 2 முதல் 5 பற்கள் ஆட்டம் கொடுத்து உடைந்துள்ளது. இதையடுத்து அவர் பீட்சா கடையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், அவர்கள் உரிய பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.