சென்னை: சென்னை வேளச்சேரியில் ரயில்வே துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலத்தை அகற்றுவதற்கு அதிகாரிகள் வந்தபோது, அவர்களை தடுத்து நிறுத்திய அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வேளச்சேரியில் உள்ள செல்போன் டவரில் ஏறி ஒருவர் போராட்டம் மேற்கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரி ரயில் நிலையம் அருகே 5 ஏக்கர் பரப்பளவில் ரயில்வேத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் சட்ட விரோதமாக 400க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், கடைகள், அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவு படி, இன்று வருவாய்த்துறை அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் இணைந்து ஆக்கிரமிப்பு பணிகளை அகற்றும் பணியில் காலை 8 மணி முதல் ஈடுபட்டு வருகின்றனர்.