சென்னை: தண்ணீர் பஞ்சத்தை போக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அதற்கு தமிழக அரசிடம் அறிக்கை கேட்டுள்ளோம் என்று நீதிபதிகள் தகவல் தெரிவித்தனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் வக்கீல் ஜார்ஜ் வில்லியம்ஸ் நேற்று ஆஜராகி, சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த கடுமையான சூழலை சமாளிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இதை நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறி குடிநீர் தட்டுப்பாடு தொடர்பான செய்திகள் வந்த தினகரன் உள்ளிட்ட நாளிதழ்களை காட்டி முறையிட்டார் இதை கேட்ட நீதிபதிகள் ஏற்கனவே குடிநீர், நிலத்தடி நீர் தொடர்பாக நீதிமன்றம் விசாரித்துள்ளது. தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது என்றனர்.