பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு அருகே அரவட்லா மலைகிராமத்தில் தண்ணீரின்றி கருகும் பயிர்கள் கால்நடைகளுக்கு தீவனமாக மாறியுள்ளது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதி கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதில் எப்போதும் குளிர்ச்சியாகவும் நீர் நிலைகள் உள்ள பகுதியாகவும் விளங்கக்கூடிய அரவட்லா மலை கிராமமும் இந்த ஆண்டு குடிநீர் பஞ்சத்திற்கு தப்பவில்லை. கோடைவெயில் மற்றும் போதிய மழையில்லாததாலும் விவசாய நிலங்கள் வறண்டு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பேரணாம்பட்டு, அரவட்லா மலைகிராமத்தை சேர்ந்தவர் நேரு(48) விவசாயி. இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அவருக்கு சொந்தமான 2.5 ஏக்கர் நிலத்தில் கேழ்வரகு பயிரிட்டிருந்தார். அப்போது, அவருக்கு சொந்தமான கிணற்றில் 350 அடி வரை தண்ணீர் இருந்தது. தற்போது, 3 மாதங்களாக நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து கிணற்றில் நீர் முழுவதுமாக வற்றிவிட்டது. இதனால், கேழ்வரகு பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் அனைத்தும் வெயிலில் கருகி 2.5 ஏக்கர் பயிர்களும் மாடுகளுக்கு தீவனமாகியுள்ளது.