சென்னை: நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்காமல் துணை முதல்வர் மகனும் எம்பியுமான ரவீந்திரநாத் குமார் புறக்கணித்தார். தனக்கு கிடைக்க வேண்டிய அமைச்சர் பதவியை தடுத்ததால் பழிவாங்கும் நோக்கத்தில் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். டெல்லி விமான நிலையத்தில் எடப்பாடியை டெல்லி பிரதிநிதி தளவாய்சுந்தரம், மாநிலங்களவை எம்பி விஜிலா சத்யானந்த் மற்றும் தம்பிதுரை உள்ளிட்டவர்கள் வரவேற்றனர். பின்னர், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் எடப்பாடி தங்கினார். அங்கும், தளவாய்சுந்தரம், தம்பிதுரை உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.வழக்கமாக, தமிழக முதல்வர் டெல்லி செல்லும்போது அதிமுகவை சேர்ந்த அனைத்து எம்பிக்களும் அவரை வரவேற்க விமான நிலையம் செல்வது வழக்கம். ஆனால், தற்போது நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக சார்பில் முதன்முறையாக தேனி தொகுதியில் எம்பியாக தேர்வு செய்யப்பட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் டெல்லி விமான நிலையத்திற்கோ, தமிழ்நாடு இல்லத்துக்கோ சென்று முதல்வரை வரவேற்கவும் இல்லை, சந்திக்கவும் இல்லை.முதல்வர் எடப்பாடி நேற்று பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் உள்ளிட்டோரையும் சந்தித்தார். அப்போது, அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார் உடன் செல்லவில்லை.