சென்னை: அடுத்த தலைமுறை போக்குவரத்துக்கான போட்டியில் பங்கேற்க சென்னை ஐஐடி மாணவர்கள் குழு ஜூலை 21ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளதாக ஐஐடி பேராசிரியர்கள் கூறினர்.இதுதொடர்பாக சென்னை ஐஐடி ஆராய்ச்சி குழு மாணவர்கள், ஏரோ ஸ்பேஸ் துறை பேராசிரியர் சக்ரவர்த்தி கூறியதாவது: அமெரிக்காவை சேர்ந்த ‘‘ஸ்பேஸ் எக்ஸ்’’ நிறுவனம் விண்வெளி ஆராய்ச்சியில், அடுத்த தலைமுறைக்கான போக்குவரத்தை உருவாக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி ‘‘ஹைப்பர் லூப்’’ எனப்படும் காற்று இல்லா குழாயில் அதிவேக டியூப் வடிவ கலனில் பயணிக்கும் திட்டத்தை உருவாக்கி வருகிறது. அந்த திட்டத்தின்கீழ், உலக அளவிலான போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. அதில் கலந்து கொள்ள உலக பல்வேறு நாடுகளை சேர்ந்த பலர் விண்ணப்பித்தனர். இந்த ஆண்டு போட்டிக்கு 1,600 குழுவினர் விண்ணப்பித்ததில், 52 குழுவினரின் வடிவமைத்த டியூப் வடிவ கலன்கள் அங்கீகரிக்கப்பட்டது. அதில் 21 குழுவினரை போட்டிகளில் பங்கேற்க ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அழைத்துள்ளது. அதில் ஆசியாவில் இருந்து சென்னை ஐஐடியை சேர்ந்த மாணவர் குழுவினர் மட்டுமே தேர்வாகியுள்ளனர். இதற்காக சென்னை ஐஐடி மாணவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தனர். அதன்பலனாக ஜூலை மாதம் 21ம் தேதி நம் மாணவர்கள் அமெரிக்காவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.