குரூப் 4 தேர்வுக்கு தடை கோரி மனு: டிஎன்பிஎஸ்சி, தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4  தேர்வு அறிவிப்புக்கு தடைவிதிக்க கோரிய மனுவுக்கு வரும் 26ம் தேதிக்குள் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 6,491 குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்து தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம், ஜூன் 7ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதில் செப்டம்பர் 1ம் தேதி எழுத்து தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு தடை விதிக்க கோரிமதுரையைச் சேர்ந்த பாலமுருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.2013ம் ஆண்டு 5 ஆயிரத்து 566 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில், 450 முதல் 500 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும்,  இந்த காலியிடங்களுக்கு 2013 தேர்வில் தேர்ச்சி பெற்று  காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை நியமிக்காமல்,  அப்பணியிடங்களுக்கும் சேர்த்து புதிதாக தேர்வு நடத்த  அறிவிப்பு வெளியிட்டுள்ளது சட்ட விரோதமானது என கூறியுள்ளார்.

இந்த மனு  நீதிபதி பார்த்திபன் முன் விசாரணைக்கு வந்தபோது, 2013 தேர்வில் ஏற்பட்ட காலியிடங்களை காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை நியமிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவை டி.என்.பி.எஸ்.சி கருத்தில் கொள்ளவில்லை எனவும்  மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.இதையடுத்து, மனுவுக்கு ஜூன் 26ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கும், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை செயலாளருக்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: