சென்னை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:சென்னை மாநகரின் கோடைக்கால குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அரசால் மொத்தம் ₹233.72 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நெய்வேலி நீர்ப்படுகையில் கூடுதலாக 9 புதிய ஆழ்துளை கிணறுகள் மூலம் 10 மில்லியன் லிட்டர் குடிநீர் எடுக்கப்படும். நெய்வேலி சுரங்கம், பரவனாறு ஆற்றில் இருந்து ₹6.67 கோடி மதிப்பீட்டில் 60 மில்லியன் லிட்டர் குடிநீர் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், சிக்கராயபுரம் கல்குவாரி மூலம் ₹11 கோடியில் பிப்ரவரி மாதம் முதல் 30 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. எருமையூர் கல்குவாரியிலிருந்து ரூ.19.17 கோடியில் 10 மில்லியன் லிட்டர் குடிநீர் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரூ.53 கோடி மதிப்பீட்டில் ரெட்டேரி, பெரும்பாக்கம், அயனம்பாக்கம் ஏரிகளிலிருந்து 30 மில்லியன் லிட்டர் நீரை சுத்திகரித்து குடிநீர் வழங்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இரட்டை ஏரியில் பணிகள் முடிக்கப்பட்டு, சோதனை ஒட்டமாக கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் பெறப்படுகிறது.