சென்னை: கன்னியாகுமரியில் 45.000 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் மீனவர் கூட்டமைப்பு கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் தூத்தூர், சின்னத்துறை, கடியப்பட்டினம், ராஜாக்கமங்கலம், மணவாளக்குறிச்சி, இடலாக்குடி உள்ளிட்ட கடலோர கிராமங்களில் 45 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதனால் நாடாளுமன்ற தேர்தலில் இந்த 45 ஆயிரம் பேரும் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக சிறுபான்மையின மக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தேர்தல் அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லை. எனவே, அதிகளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்ட பகுதிகளில் மறுதேர்தல் நடத்துமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.