சென்னை: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர் தேர்வில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பாக, சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் 298 பேர் நேரில் ஆஜராகினர். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் துப்புரவு பணி மற்றும் தபால் பிரிவில் தற்காலிகமாக பலர் வேலை செய்து வந்தனர். இந்நிலையில், நிரந்தரமாக பணியமர்த்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, கடந்த 2013-15ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் தமிழகம் முழுவதும் 900 பேர் நியமனம் செய்யப்பட்டனர். இந்த பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், எஸ்.எஸ்.எல்.சி.யில் தோல்வி அடைந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் அதிகமாக படித்த பலர் போலியாக கல்வி சான்றிதழ்களை சமர்ப்பித்து பணியில் சேர்ந்ததும், இதற்கு வங்கி அதிகாரிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், பள்ளி தலைமை ஆசிரியர்களும் பணம் வாங்கிக் கொண்டு உடந்தையாக இருந்ததும் சி.பி.ஐ.க்கு தெரியவந்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ., வங்கியின் அப்போதைய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் நரேந்திரா, தொழிற்சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், போலி கல்வி சான்றிதழ் வழங்கிய 4 ஆசிரியர்கள், போலி கல்வி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் என மொத்தம் 446 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது.