சென்னை: அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் உபரியாக உள்ள ஆசிரியர்களை பணியிடமாற்றம் செய்ய பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மொத்தம் 45 ஆயிரம் இயங்கி வருகின்றன. இவற்றில் அரசுப் பள்ளிகள் மட்டும் 35 ஆயிரம் உள்ளன. மொத்தம் உள்ள பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், தற்காலிக ஆசிரியர்கள், என சுமார் 2 லட்்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் மட்டும் அதிக அளவில் ஆசிரியர்கள் பணியாற்றுவதாக பள்ளிக் கல்வித்துறை கணக்கெடுத்துள்ளது. ஒரு பள்ளியில் ஒரு பாடத்துக்கு ஒரு ஆசிரியர் அல்லது மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப பாட ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்ற விதியின்படி அல்லாமல் கூடுதலாக ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். சில மாவட்டங்களில், உரிய பாட ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் படிக்கவே சிரமப்படுகின்றனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் தேர்ச்சி வீதம் குறைவதாக பள்ளிக் கல்வித்துறை கண்டறிந்துள்ளது.