சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாந்தோம் சென்னை அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் பயிற்சி வகுப்புகள் சிறந்த வல்லுநர்களை கொண்டு இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியின் மூலம் சென்னை மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு மனுதாரர்கள் பயனடைந்துள்ளனர்.

இதனை கருத்தில் கொண்டு தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 4, 2019 தேர்வுக்கு சென்னை மாவட்டத்தை சேர்ந்த மனுதாரர்கள் கலந்துகொண்டு எளிதில் வெற்றி பெற ஏதுவாக போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 19ம் தேதி முதல் சென்னை சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொடங்கப்பட உள்ளது. இதில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள மனுதாரர்கள் வருகிற 18ம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாந்தோம் சென்னை-4 அலுவலகத்தை திங்கள் முதல் வெள்ளி வரை அலுவலக நேரங்களில் தொடர்பு கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044-24615160 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: