சென்னை: பெரியபாளையம் அருகே, வடமதுரையில் எங்கள் தாகத்தை தணித்த குளங்களை காணவில்லை. அதை கண்டுபிடிச்சு கொடுங்க என்று நடிகர் வடிவேல் பாணியில் திருவள்ளூர் கலெக்டரிடம் புகார் வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவள்ளூர் பெரியபாளையம் அருகே வடமதுரை ஊராட்சியில் விவசாயிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் என, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலான நிலம் வானம் பார்த்த பூமியாக உள்ளதால் விவசாயிகள் நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்களை விவசாயம் செய்து வருகிறார்கள். மேலும், வடமதுரை ஊராட்சியில் உள்ள, எம்டிசி நகர் மற்றும் வடமதுரை கூட்டுசாலை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள குளங்கள் ஆக்கிரமிப்பால் காணாமல் போயுள்ளது.