உபி முதல்வர் குறித்து அவதூறு செய்தி: பத்திரிக்கையாளர் கைதுக்கு எதிரான மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

புதுடெல்லி: உத்தரப் பிரதேச முதல்வர் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட பத்திரிக்கையாளரின் மனைவி உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். உத்தரப் பிரதேச முதல்வர் அலுவலகத்துக்கு வெளியே பெண் ஒருவர், முதல்வர் யோகி ஆதித்யநாத்தை திருமணம் செய்து கொள்ளும் விருப்பத்தை அவருக்கு அனுப்பியதாக ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார். இந்த வீடியோ காட்சியை நொய்டாவை சேர்ந்த பத்திரிக்கையாளர் பிரசாந்த் கனோஜியா டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். இதனை தொடர்ந்து முதல்வர் யோகி குறித்து அவதூறு செய்தி பரப்பியதாக பிரசாந்த் கனோஜியா மீது லக்னோவில் உள்ள ஹஸ்ரத்கஞ்ச் காவல் நிலையத்தில் கடந்த வெள்ளியன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், கனோஜியாவின்  கைது நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதனிடையே கைது செய்யப்பட்ட கனோஜியாவின் மனைவி ஜகீஷா அரோரா ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். இதனை தொடர்ந்து நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, அஜய் ரஸ்தோகி, ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு முன் இந்த மனு இன்று விசாரணைக்கு வருகின்றது.

Related Stories: