சென்னை: கீழ்பவானி விவசாயிகள் சங்க தலைவர் நல்லசாமி வெளியிட்ட அறிக்கை: பவானி சாகரிலிருந்து பவானி வரையிலான 70 கி.மீ. தூரத்திற்கு ஆற்றின் இருமருங்கும் பல கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் உள்ளன. இவை போக கொடிவேரி அணைக்கு அருகாமையில் பெருந்துறை கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு நீர் எடுக்கும் பணி நடந்து வருகிறது. இந்த கூட்டுக் குடிநீர்த்திட்டங்கள் அனைத்திற்கும் விநாடிக்கு 20 கனஅடி என்ற அளவில் அணையிலிருந்து தண்ணீர் எடுத்தால் போதுமானது. ஆனால், இன்று ஆலைப்பயன்பாட்டிற்கும், அனுமதியற்ற பாசனங்களுக்கும் சேர்த்தே முறைகேடாகத் தண்ணீர் எடுக்கும் பொருட்டு அணையிலிருந்து ஆற்றின் வழியாக விநாடிக்கு 200 கனஅடி என்ற அளவில் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. ஆலைகளால் மாசுபடுத்தப்பட்ட இந்த நீரே மக்களுக்கு குடிநீர் என்ற பெயரில் கொடுக்கப்படுகிறது.