சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையிலுள்ள நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் வலியுறுத்தியுள்ளனர். 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசின் பரிந்துரை மீது ஆளுநர் மாளிகை விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்பது புகாராகும். இந்நிலையில் இவ்விவகாரத்தில் மாவோயிஸ்டுகள் முதன்முறையாக தலையிட்டுள்ளனர். அந்த அமைப்பின் ஆதரவாளர்கள் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் துண்டு பிரசுரங்களை வெளியிட்டுள்ளனர். அதில், நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு ஆதரவாக குரல் கொடுப்பது ஏன் என விளக்கமளித்துள்ளனர். அதாவது, 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும். அதேபோல், 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் அனைத்து இஸ்லாமிய அரசியல் சிறை வாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும். ஐந்து ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் வாடும் தமிழ்த்தேசிய போராளிகள் ஐவரை விடுதலை செய்ய வேண்டும்.