சென்னை: சென்னை மக்களின் குடிநீர் தேவையை போக்கி வந்த புழல் ஏரி முற்றிலும் வறண்டுவிட்டது. இதை பயன்படுத்தி நீர்வரத்து கால்வாய், தூர்வாருதல், பராமரிப்பு பணிகளை வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக அரசு செய்து முடிக்குமா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி கேட்கும் நிலையில், சென்னை மக்களின் தாகத்தை எப்படி தீர்ப்பது என்று தெரியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடி. இதேபோல் மற்றொரு ஏரியான சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மில்லியன் கன அடி. இந்த 2 ஏரிகளும், குறித்த நேரத்தில் பருவ மழை பெய்யாதது மற்றும் கோடை வெயிலினால் வறண்டு போயிருக்கிறது.
இங்கு அந்த தண்ணீரை சுத்தம் செய்து சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்கு வழங்கப்படுகிறது. வரும் மாதங்களில் பருவமழை பொய்த்து போனால், சென்னை நகர மக்களின் தேவைக்கு இந்த தண்ணீரைக்கூட எடுத்து அனுப்ப முடியாத சூழல் உருவாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், புழல் ஏரியில் தூர்வாருவதற்கு போதிய நிதி ஒதுக்கியும் இன்னும் அப்பணிகள் துவங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் சோழவரம் ஏரியில் தூர்வாரும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றாலும், குறிப்பிட்ட இடங்களில் மண்களை எடுத்து வருவதால், அங்கு ராட்சத பள்ளம் உருவாகும் நிலை உள்ளது. அங்கு மழை பெய்தால்கூட பள்ளங்களில் மட்டும் தண்ணீர் நிரம்பும். ஆனால், மதகு திறந்துவிடப்படும் இடத்துக்கு தண்ணீர் வருவது காலதாமதமாகும். எனவே, சோழவரம் ஏரியில் பரவலாகவும் சீரான முறையில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.