சென்னை: கனடாவை சேர்ந்தவர் பஞ்சரத்தினம். இவரது மனைவி கவிதா கனக சூரியா. இவர்கள், கடந்த ஒரு வாரமாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கினர். நேற்று காலை நட்சத்திர விடுதியின் கீழ் தளத்தில் உள்ள உணவகத்திற்கு சாப்பிட சென்றபோது, இவர்களது அறையில் வைத்திருந்த கனடா டாலர்கள் (இந்திய மதிப்பு ரூ.4.5 லட்சம்) திருடு போனது. புகாரின் பேரில் ராயப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
* மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியில் உள்ள கோயில்களின் உண்டியலை உடைத்து திருடிய அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி (25) மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட 4 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
* எண்ணூர் காசி விசாலாட்சி நகரை சேர்ந்த விக்னேஷ் (32) என்பவரின் வீட்டு பூட்டை உடைத்து ₹6,000 மற்றும் 2 செல்போன்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.* புதுவண்ணாரப்பேட்டை, பூண்டி தங்கம்மாள் தெருவை சேர்ந்த வினோத்குமார் (24) என்பவரை, கத்தி முனையில் மிரட்டி, அவர் அணிந்திருந்த இரண்டரை சவரன் நகை மற்றும் 700 ரூபாயை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.* அமைந்தகரை எம்.எம்.காலனியை சேர்ந்த ஏழுமலை (20) என்பவர், ஒரு பெண்ணை காதலித்து வந்தார். ஆனால், அந்த பெண் காதலை ஏற்க மறுத்ததால் மனமுடைந்து நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.* விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (35) என்பவரின் செல்போனை மர்மநபர்கள் பறித்துக் கொண்டு தப்பினர்.* சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளியில் பயின்று வரும் ஜாகிர் உசேன் (18) என்ற மாணவன், நேற்று முன்தினம் இரவு பள்ளியின் விடுதியில் இருந்து மாயமானார்.* எழும்பூர் போலீசார் ஹாரிஸ் ரோடு, வெங்கடாச்சல நாயக்கன் தெருவில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, ஆவணமில்லாத 9 பைக்குகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வேனில் சென்ற பட்டாளம் அம்பேத்கர் கல்லூரி சாலையை சேர்ந்த சபூர் மொய்தீன் (55), புதுப்பேட்டை லப்பை தெருவை சேர்ந்த ஜாகிர் உசேன் (44), புதுப்பேட்டை வேலாயுதம் ஆச்சாரி தெருவை சேர்ந்த வேன் டிரைவர் சக்திவேல் (33) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.* கொளத்தூர் வேலவன் நகரில் சட்டவிரோதமாக ரயில் டிக்ெகட் விற்ற கொனான் ஜோசப் டுரன்ட் (33) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த கணினி, ரூ.4022.84 மதிப்பிலான டிக்கெட் ஆகியற்றை பறிமுதல் செய்தனர்.* வேளச்சேரி ராம் நகர் வடக்கு விரிவு பிரதான சாலையில் உள்ள ஒரு வீட்டில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்திய ஐசக் (23), சிவமணி (24), விஷால் (25) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.