சென்னை: மெரினா கடற்கரையில் போராட்டங்களோ, பொதுக்கூட்டங்களோ நடத்த கூடாது என்ற உத்தரவை பின்பற்றுமாறு அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மெரினாவில் போராட்டங்களை அனுமதிக்க கூடாது என உத்தரவிட கோரி, சென்னை மயிலாப்பூரை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், மத்திய, மாநில அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவதற்கு அரசியல் கட்சிகள், சங்கங்கள், சில அமைப்புகள் மெரினா கடற்கரையை தேர்வு செய்கின்றன. இவ்வாறு நடத்தப்படும் போராட்டங்களால் போக்குவரத்து மட்டுமல்லாமல், சுற்றுலா பயணிகளும் பாதிக்கப்படுகிறார்கள். ஏற்கனவே மெரினாவில் போராட்டம் நடத்த தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.