திருவாரூர்: திருவாரூரில் தியாகராஜசுவாமி கோயிலின் தெப்ப திருவிழா வரும் 14,15 மற்றும் 16 தேதிகளில் நடைபெறுவதையொட்டி தெப்பம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக தியாகராஜசுவாமி கோயில் உள்ளது. இது சைவ சமய தலங்களில் முதன்மையான தலமாகும். இக்கோயில் 5 வேலி நிலப்பரப்பினை கொண்டது. இதேபோல் இதற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் ஆழித்தேரும், கமலாலய குளமும் இருந்து வருகிறது. கோயிலின் முக்கிய விழாக்களில் ஒன்றான பங்குனி உத்திர விழாவில் ஆழி தேரோட்ட விழாவும், பின்னர் கமலாலய குளத்தில் தெப்பத் திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆழித்தேரோட்ட விழா கடந்த ஏப்ரல் மாதம் 1ம்தேதி நடைபெற்றது. இந்நிலையில் தெப்ப திருவிழா வருகிற 14, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.