சென்னை: தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க தலைவர் விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் காவிரி தண்ணீரை நம்பி 12 மாவட்டங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் 30 லட்சம் ஏக்கரில் குறுவை, சம்பா, தாளடி என விவசாயம் நடந்து வந்தது. அது 1991லிருந்து குறுவை சம்பா சாகுபடி என இருபோக சாகுபடியாக மாறியது. பின் 2011க்கு பிறகு சம்பா சாகுபடி மட்டுமே என மாறியுள்ளது. 30 லட்சம் ஏக்கர் காவிரிப்பாசன விவசாயம் இப்போது 12 லட்சம் ஏக்கர் மட்டுமே நடந்து வருகின்ற சூழ்நிலையில் கர்நாடகா தமிழகத்திற்கு காவிரி நீர் தராமல், 3 ஆயிரம் புதிய ஏரிகளை வெட்டி காவிரி தண்ணீரை சேமித்து வைத்தும் வாய்க்கால்களில் தடுப்பணைகளை கட்டியும் தனது விவசாய நிலப்பரப்பை 8 லட்சத்திலிருந்து 22 லட்சமாக உயர்த்தியுள்ளது.