திருவொற்றியூர்: திருவொற்றியூர் மேற்கு பகுதிக்கு உட்பட்ட கார்கில் நகர், ராஜாஜி நகர் போன்ற பகுதிகளில் 50 ஆயிரத்தும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, குடிநீர் வழங்கல் வாரியம் சார்பில், தெரு குழாய் மற்றும் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. கோடை காலம் தொடங்கிய நாள் முதல், இப்பகுதியில் முறையாக குடிநீர் வழங்காததால் மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில், குடிநீர் பிரச்னை தொடர்பான ஆலோசனை கூட்டம், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் விஜய பிரகாஷ், உதவி பொறியாளர் விஜயநிர்மலா தலைமையில், திருவொற்றியூர் ராமசாமி நகரில் நடைபெற்றது. இதில், பங்கேற்ற பொதுமக்கள் தங்கள் பகுதியில் குடிநீர் சரியாக வருவதில்லை. அவ்வப்போது வருகிற நீரிலும் கழிவுநீர் கலந்து கலங்கலாக உள்ளது. இதை பயன்படுத்துவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. குடிநீர் லாரி வரும் நேரம் சரியாக தெரியவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினர்.