தாம்பரம்: தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலை முக்கிய போக்குவரத்து தடமாக உள்ளது. சேலையூர், கேம்ப் ரோடு, திருவஞ்சேரி, மப்பேடு, அகரம் தென், மாடம்பாக்கம், சந்தோஷபுரம், வேங்கைவாசல், மேடவாக்கம், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதி மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.அதுமட்டுமின்றி, ராஜிவ்காந்தி சாலையில் உள்ள ஐ.டி. மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்பவர்கள் என தினமும் ஆயிரக்கணக்கானோர் இவ்வழியே சென்று வருகின்றனர். போக்குவரத்து மிகுந்த இச்சாலையில் தாம்பரம் மேம்பாலம் தொடங்கி சந்தோஷபுரம் சிக்னல் வரை ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள சிக்னல்கள் பழுதடைந்துள்ளன.இவ்வழியே காலை, மாலை நேரங்களில் வாகன ஓட்டிகள் தாறுமாறாக செல்வதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. போக்குவரத்து போலீசாரும் பணியில் ஈடுபடாததால், விபத்துகள் அதிகரித்து வருகிறது.இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘‘தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில் ஆங்காங்கே உள்ள சிக்னல்கள் பழுதடைந்துள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.சேலையூர் காவல் நிலையம் தொடங்கி கேம்ப் ரோடு சிக்னல் வரை சாலை குறுகியுள்ளதால், கடந்த சில மாதங்களாக விபத்து அதிகரித்து வருகிறது.