மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகம் அருகே உளவுத்துறை எஸ்ஐ வீட்டில் 25 சவரன் நகை கொள்ளை: ஆசாமிகளுக்கு வலை

சென்னை: காவலர் குடியிருப்பில் உளவுத்துறை உதவி ஆய்வாளர் வீட்டை உடைத்து, மர்ம நபர்கள் 25 சவரன் நகை மற்றும் ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் வாசு. தமிழக காவல் துறையில் உளவு பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். கோடை விடுமுறை என்பதால் வீட்டில் உள்ள அனைவரும் சொந்த ஊர் சென்றுவிட்டனர். வாசுவுக்கு நேற்று முன்தினம் இரவு பணி என்பதால் வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்றுவிட்டார். பணி முடிந்து நேற்று காலை வீட்டிற்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு வாசு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது மர்ம ஆசாமிகள் பீரோவை உடைத்து 25 சவரன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. உடனே சம்பவம் குறித்து உதவி ஆய்வாளர் வாசு மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வீடு முழுவதும் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். தமிழக டிஜிபி அலுவலகம் அருகே எந்தவித அச்சமும் இன்றி கொள்ளையர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் போலீசாரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: