தாலி கட்டிக்கொண்டு பூஜை அறையில் காதல் ஜோடி தற்கொலை... 7 வருட காதல் உயிரோடு கருகியது

கும்பகோணம்: பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்ட பெண் இன்ஜினியர் கணவருடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கும்பகோணம், காமராஜர் நகர், கலைஞர் காலனியை சேர்ந்தவர் ரவீந்திரன். ஒய்வு பெற்ற எஸ்ஐ. இவரது மகன் சுரேஷ்(23). பி.எஸ்.சி. பட்டதாரி. இவரும், கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதுார், வண்ணக்குடியை சேர்ந்த சுவாமிநாதன் மகள் பொறியியல் பட்டதாரி சரண்யாவும் (23), கடந்த 7 வருடமாக காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் உறவினர்கள். ஆனாலும், உறவில் திருமணம் செய்யக்கூடாது என இருதரப்பு பெற்றோரும் உறுதியாக இருந்தனர். அதே நேரத்தில் சரண்யாவும், சுரேசும் தங்கள் காதலிலும் உறுதியாக இருந்தனர். சரண்யா தற்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார்.

இ்நத நிலையில் கடந்த 29ம் தேதி சரண்யா கும்பகோணம் காமராஜர் நகரிலுள்ள சுரேஷின் வீட்டிற்கு சென்றார். வீட்டில் வேறு யாரும் இல்லை. சுரேஷ் தனது வீட்டு பூஜை அறையில் சரண்யாவுக்கு தாலி கட்டினார். பின்னர்பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டோமே பெற்றோரை எப்படி சமாளிப்பது என ஆலோசித்தனர். வாழ்வில் இணைய முடியாத நாம் இனி சாவில் இணைவோம் என முடிவு செய்து அவர்கள் வீட்டில் இருந்த எலிபேஸ்டை எடுத்து தின்று விட்டு பூஜை அறையிலேயே மயங்கி விழுந்தனர். சிறிது நேரம் கழித்து அங்கு வந்த சுரேஷின் பெற்றோர் இருவரும் மயங்கி கிடப்பதை பார்த்தனர். அப்போது சரண்யா கழுத்தில் புதிய தாலி கயிறும் இருந்து உள்ளது. உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இருவரையும் கும்பகோணம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருவரும் நேற்று இறந்து விட்டனர். இது குறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: