மாணவர் சேர்க்கை 30% கீழ் குறைந்தால் மூட வேண்டும்: ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாடு

சென்னை: 30 சதவிகிதத்திற்கு குறைவான மாணவர் சேர்க்கை உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த கல்வியாண்டு முதல் இது நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 247 தனியார் மற்றும் 29 அரசு நிதிபெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மாணவர் சேர்க்கை அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட 20 சதவிகிதத்திற்கு குறைவாகவே பெரும்பாலான ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகிறது. இதனால் அரசு நிதி உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு மானியம் வழங்குவது வீண் செலவினம் என்று பள்ளிக்கல்வித்துறை கருதுகிறது.

எனவே, 2019-20ம் கல்வியாண்டு முதல் தேசிய 30% மாணவர்கள் சேர்ந்திருந்தால் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு குறைவாக மாணவர் சேர்க்கை உள்ள நிறுவனங்களை அடுத்த கல்வி ஆண்டு முதல் மூட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை, போட்டித்தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள முடியாமை போன்ற காரணங்களால் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவர்கள் சேர தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறையின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து, அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. முன்னதாக தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் விதிமுறைகளின்படி, 30% குறைவாக மாணவர் சேர்க்கை உள்ள கல்வி நிறுவனங்களை மூடலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: